ஆசிய அபிவிருத்தி வங்கி 165 மில்லியன் டொலர் நிதி ஒத்துழைப்பு அமைச்சரவை அங்கீகாரம்
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நிதியுதவி வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 165 மில்லியன் டொலர் நிதி ஒத்துழைப்புடன் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு இலகு வட்டியின் கீழ் முதலீடு மற்றும் கடன் உதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான கடன் முறைத்திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, வங்கிகளில் நிதி பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கல் மற்றும் பிணையை அடிப்படையாகக் கொண்டு கடன்களை வழங்கல் போன்றவற்றுக்கு முன்னுரிமையளிப்பதில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையிலேயே தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமது தொழில் முயற்சிகளுக்காக நிதியை பெற்றுக்கொள் வதில்,தொழில் முயற்சியாளர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது.
இதற்காக முதற்கட்டமாக 100 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)