வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் வேலைத் திட்டத்தை முழுமையாகவும், நேர்மையாகவும் செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அறிக்கையொன்றையும் அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 318 இலத்திரனியல் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் நாட்டிற்கு 38 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளில் ஏதாவது மோசடிகள் இடம்பெற்றிருந்தால், அதற்கான விசாரணைகளில் பூரண ஒத்துழைப்புகளை வழங்கவும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்நடைமுறையிலிருந்து பின்வாங்கப் போவதில்லையென்றும் அந்த அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தீர்வை வரி சலுகையுடன் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள 119 அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற முறைமை மற்றும் நிதி தொடர்பான தெரிவுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் 75% வாகனங்களை ஒரே நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)