அமைச்சர்களான ஹரீன்பெர்னாண்டோ, மனுஷநாணயகார ஆகியோர்களது மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரு 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமது கட்சி அங்கத்துவத்தை இல்லாதொழிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மேற்படி மனுமீதான விசாரணை நேற்றைய தினம் (23) விஜித்மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுண ஒபேசேகர ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்றம் இந்த விசாரணையை ஒத்தி வைத்தது.
நேற்றைய தினம் இந்த மனுமீதான விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
மனுதாரர்கள் தமது மனுவில், எந்தவித நீதியான விசாரணைகளுமின்றி தமது கட்சி அங்கத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி நீக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம் முற்றாக சட்டத்திற்கு முரணானது எனக்குறிப்பிட்டனர்.
இந்தவகையில் இந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டுமென்றும் அமைச்சர்கள் இருவரும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்