1990 களில் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு சென்ற வடக்கு முஸ்லிம் மக்களுக்கு உதவிபுரிந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட உலமாக்கள், பொதுமக்கள் சார்பில் இருவர் மன்னாரில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் அதிகமானோர் புத்தளம் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறு வடக்கு முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வழங்கி கௌரவித்த புத்தளம் மக்களை கௌரவிக்கும் முகமாக, அம்மக்கள் சார்பில் இருவரை அழைத்து ஜனாதிபதியின் கரங்களினால் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
புத்தளம் மாவட்ட முஸ்லிம் நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள் சார்பில் புத்தளம் மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் முஹம்மட் பஸால் ஹாஜியாரும், புத்தளம் மாவட்ட மக்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் சார்பில் மூத்த உலமாவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கௌரவிக்கப்பட்டவர்களாவர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்