காசாவுக்குள் ஊடுருவி தேடுதலில் ஈடுபட்ட இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் ஹமாஸ் நடத்திய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று (22) இடம்பெற்ற இந்த சம்பவத்தை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்திருப்பதோடு இஸ்ரேலிய படையினரை பின்வாங்கச் செய்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
ஊடுருவிய படைகளுடன் மோதலில் ஈடுபட்டதோடு இரு புல்டோசர்கள் மற்றும் டாங்கி ஒன்றை தாக்கி அழித்ததாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் தமது வாகனங்களை விட்டுவிட்டு கால்நடையாக கிழக்கில் எல்லை வேலியை நோக்கி ஓடியதாகவும் அது தெரிவித்துள்ளது.
காசாவின் கான் யூனிஸ் பகுதியில் ஹமாஸினால் பிடித்துவைத்திருக்கும் பணயக்கைதிகள் இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியாகவே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அது அந்த பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பணயக்கைதிகள் தொடர்பில் உளவு தகவல்களை சேகரிப்பதற்கும் இவ்வாறு செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஒன்றை எதிர்கொள்ள ஹமாஸ் தயாராகி வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.