2024 ஆம் ஆண்டு முதல் தினமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்னோடி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், அது தொடர்பில் சகல எரிபொருள் விநியோக நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாதாந்தம் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் நடைமுறை தற்போது அமுலில் உள்ளது.இம்முறையை கைவிட்டு, புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க அடுத்த வருடம் முதல் தினந்தோறும் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வதற்கான நடைமுறை அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அதுவரை தட்டுப்பாடின்றி மக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சினோபெக் நிறுவனத்துடன் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவணி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்