தென் மாகாண கடற்பரப்பில் வைத்து 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்கள் ஐவரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனைக் கடத்தி வர பயன்படுத்திய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டது. இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 212 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளின் பெறுமதி 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை, ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் 160 பார்சல்களாக கொண்டுவரப்பட்டிருந்தது. 180 கிலோ மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பார்சல்கள் மற்றும் 28 பார்சல்களில் கொண்டுவரப்பட்டிருந்த 31 கிலோ பார்சல்கள் மற்றும் 550 கிராம் ஐஸ் போதைப் பொருள் ஆகியவையே கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் தெவுந்தர ஆழ்கடல் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 வயது முதல் 53 வயதானவர்களாவர்.இவர்கள் தெவுந்திர மற்றும் கோட்டேகொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில், 15,160 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, கடற்றொழில் என்ற போர்வையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி போதைப் பொருள், ஆழ்கடல் மீன்பிடிப் படகை மற்றும் தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்