கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் அபேக்ஷா தமிழ் நாடகத் திருவிழா முதற்தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது.
யாழ். வலிகாமம் வலயத்திற்குட்பட்ட யூனியன் கல்லூரியில் எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
இவ் நாடகத் திருவிழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கலாசார அமைச்சின் நாடக மத்திய நிலையமாக விளங்கும் டவர் மண்டபத்தின் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கலைத்துறையின் மேம்பாட்டிற்காகவும் கலைஞர்களின் கௌரவத்திற்காகவுமே டவர் மண்டப அரங்க மன்றம் செயற்பட்டு வருகின்றது.
கொழும்பில் எல்பிஸ்டன் மற்றும் டவர் அரங்கில் வருடந்தோறும் நடைபெறுகிற நாடக திருவிழாவானது டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இங்குள்ள பாடசாலை மாணவர்களின் நாடகத் திறமைகளையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காகவும் அபேக்ஷா யாழ். தமிழ் நாடகத் திருவிழா எனும் தொனிப் பொருளில் முதற்தடவையாக இந் நாடக விழா இம் மாதம் எதிர்வரும் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்கள்காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை யாழ் யூனியன் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.
இங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நாடகத் திருவிழாவில் டவர் மண்டப அரங்க மன்ற பாடசாலை மாணவர்களின் நாடகங்களும் வலிகாமம் பிரதேசத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடக ஆசிரியர்களினது நாடகங்கள் உட்பட நாடக ஆளுமைகள் பலரதும் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட இருக்கின்றன.
பருத்திதுறை விசேட நிருபர்