இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 21 ஓட்டங்களால் டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1–1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.
தம்புள்ளையில் நேற்று (19) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை வளர்ந்துவரும் அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 297 ஓட்டங்களை பெற்றது. அணித் தலைவர் அஹன் விக்ரமசிங்க 77 ஓட்டங்களை பெற்றதோடு சொனால் தினுஷ 62 ஓட்டங்களை குவித்தார்.
பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் 36 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களை பெற்றிருந்தபோதும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் டக்வர்த் லுவிஸ் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (22) தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.