காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லும் வகையில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது.
பிரேசில் முன்மொழிந்த இந்த தீர்மானம் கடந்த சில நாட்கள் தாமதித்த நிலையில் நேற்று முன்தினம் (18) வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு 12 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்ததோடு ரஷ்யா மற்றும் பிரிட்டன் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.
எனினும் அமெரிக்கா மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித்தது. இந்தத் தீர்மானத்தில் இஸ்ரேலின் தற்பாதுகாப்பு உரிமையை குறிப்பிடத் தவறியதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் தோமஸ் கிரீன்பீல்ட் விமர்சித்தார். இந்தக் கூற்றை பிரிட்டன் தூதுவர் பார்பரா வூட்வேட்டும் பிரதிபலித்தார்.
பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“எமது அமெரிக்க சகாவின் பாசாங்குத்தனமான மற்றும் இரட்டை நிலைப்பாட்டை எம்மால் மீண்டும் ஒருமுறை காண முடிந்துள்ளது” என்று ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் வசிலி நபன்சியா தெரிவித்துள்ளார். காசாவின் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானமும் கடந்த திங்கட்கிழமை தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.