– மிலேச்சத்னதம் வெளிப்படுவதாக உலக நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம்
– அமெரிக்க ஜனாதிபதி பைடனின் விஜயத்திற்கு முன்னதாக சம்பவம்
காசா நகர மையத்தில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலிய விமானப்படை நேற்றையதினம் மேற்கொண்ட தாக்குதலில் 500 பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய விமானப்படையின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த அல் அஹ்லி மருத்துவமனையில் பலஸ்தீன பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அத்துடன் காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாடசாலை வளாகமும் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தாக்குதல் காரணமாக வைத்தியசாலையின் இடிபாடுகளுக்கு மத்தியில் மக்கள் சிக்கியுள்ளதோடு, உடல் உறுப்புகள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மனிதாபிமான அமைப்பான பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம், “மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபததி ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றடையும் நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடி இது தொடர்பில் கேட்டதாகவும், இத்தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை எனவும், ஹமாஸ் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல் தவறுதலாக அல் அஹில் மருத்துவமனை மீது வீழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த வருத்தமடைவதாகவும், நடந்த விடயம் தொடர்பில் விசாரிக்குமாறும் தனது தேசிய பாதுகாப்புக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் குறித்த தாக்குதல் தொடர்பில் எந்தவொரு தரப்பையும் அவர் சாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜோர்தான் மற்றும் எகிப்திய தலைவர்கள் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை பைடன் சந்திக்கவிருந்த உச்சிமாநாட்டை ஜோர்தான் இரத்து செய்துள்ளக, ஜோர்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆயினும், அல் அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் மிலேச்சத்தனம் வெளிப்படுத்தப்படுவதாக, உலக நாடுகள் பலவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் போராளிகளை அழிப்பதாக கூறி பலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரிட ஆரம்பித்துள்ள நிலையில், பலஸ்தீன பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பில் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.