பொது சுகாதார சேவைக்கு அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கெக்கிராவ தெலம்பியகம குளத்தில் கொண்டு வீசப்பட்டிருந்த அரச முத்திரை பதிக்கப்பட்ட பல்வேறுபட்ட 5,000 மருந்து குப்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மணி நேரத்திற்குள் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த வியாபாரியை கைது செய்ய முடிந்துள்ளதாக கெக்கிராவ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொது சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய உடனடியாக செயற்பட்ட குறித்த பிரிவின் வைத்திய அதிகாரி அசித கெளசல்ய தனிப்புலி ஆராச்சி உள்ளிட்ட குழுவினர் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதனூடாக கெக்கிராவ நகருக்கு அருகாமையிலுள்ள தெலம்பியகம குளத்தில் சுகாதார பிரிவினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பாதுகாப்பற்ற வகையில் வீசப்பட்டிருந்த அரச முத்திரை பொறிக்கப்பட்ட பாவிக்கப்பட்ட 5,000 மருந்து குப்பிகளை சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வியாபாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் அப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்