ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பது தொடர்பான விசாரணைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதென, ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி நாடு திரும்பியதும் பதிலளிப்பார் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுவதன் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக் குழு அமைப்பது தொடர்பில் நேற்று சபையில் நிலவிய சர்ச்சையின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அது தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தார். இதன்போது பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் நம்பிக்கை இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்