இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய நேரடி தாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சபையில் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் பாதிப்பு இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தலாம். மத்திய கிழக்கில் பணிபுரியும் பல இலட்சக்கணக்கான இலங்கையர் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தேயிலை,ஏனைய ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலாத்துறை ஆகியன இதனால் பாதிக்கப்படும்.
இதனை கவனத்திற் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் மோதலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்துவது அவசியமானது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர்,இந்த கோரிக்கை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படுமென சபைக்கு அறிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்