புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை கருத்திற்கொண்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தையும் அவர்,சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இ.தொ.காவின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் தொழில்சார் சட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இதன் தற்போதைய நிலைவரம் பற்றி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இலங்கையில் தொழில்சார் சட்டங்கள் பல இருந்தாலும் 17 மாத்திரமே நடைமுறையில் உள்ளன. தொழில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் உள்வாங்கப்படாமலேயே உத்தேச திட்டம் வெளிவந்துள்ளது. எனவே, இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.