கட்சிதாவிய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் தற்பொழுது அச்சத்தில் இருக்கின்றனர். நான் ஒருபோதும் கட்சி மாறவில்லை. நாங்கள் இருந்ததும் தற்பொழுது இருப்பதும் எதிர்காலத்தில் இருக்கப் போவதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயாகும். ஒருவரும் கடந்த காலங்களில் எமது கட்சியை விட்டுச் செல்லவில்லையென்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (15) தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சிதாவல் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் அதிகமானோர் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகள் பறிபோகும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்.
நான் ஒருபோதும் கட்சிமாறவில்லை. நாங்கள் இருந்ததும் தற்பொழுது இருப்பதும் எதிர்காலத்தில் இருக்கப் போவதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே ஆகும். ஒருவரும் கடந்த காலங்களில் எமது கட்சியை விட்டுச் செல்லவில்லை.
இதனால் எமக்கு இந்த தீர்ப்பு தொடர்பாக எவ்வித அச்சமோ பயமோ இல்லை. நாம் எப்பொழுதும் கட்சியுடனேயே இருந்தோம். தற்பொழுதும் கட்சியுடனேயே இருந்து வருகின்றோம்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது என்பது எமது கட்சியின் மத்திய அதிகார சபையின் தீர்மானமாகும். இந்த தீர்மானத்தினால் தற்பொழுது கட்சி மாறுவதற்கு தீர்மானித்திருந்த அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக இரண்டு முறை அல்லது பலமுறை சிந்தித்தவண்ணம் இருந்து வருகிறார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்