முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திலுள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இப்பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள உயர் அதிகாரிகள், வனவளத்திணைக்கள உயர் அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், காணி தொடர்பிலான திணைக்கள உயர் அதிகாரிகள், கமநலசேவை திணைக்கள உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பயணம் மேற்கொண்டு கள ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் இறுதியில் குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியிலிருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்துள்ளார்.
பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காக அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்துள்ளார். குருந்தூர் குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)