அம்பாறை மாவட்டத்தில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு- 2024 கணக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பிரதேச மட்ட பயிற்சி செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி செயலமர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பயிற்சியின் பின்னர் பிரதேச செயலகரீதியாக சகல கட்டடங்களையும் இலக்கமிட்டு பட்டியல்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்முறை வழமையாக படிவங்களை பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்படமாட்டாதெனவும் அதற்கு பதிலாக மடிக்கணினிகள் மூலம் கெப்பி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு நடவடிக்கைகளை முன்னிட்டே கட்டடங்களை பட்டியல்படுத்தும் நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நடவடிக்கைகளுக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் தங்களது பூரண பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்டுள்ளார்.
(ஒலுவில் விசேட நிருபர்)