தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்து வருகிறது. இந்த வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
மேலும் தலைமை நீதிபதி, “உச்ச நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தில் உள்ள சரத்துகளை கையாள முடியும். 200 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் ஏற்காத பல விஷயங்கள் இன்று ஏற்கப்பட்டுள்ளது. சதி குழந்தைகள் திருமணம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. ” என்று தெரிவித்தார். தொடர்ந்து தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது. ஏற்கனவே, தன்பாலின உறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிட கோரி தன்பாலின ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
தன்பாலின ஈர்பாளர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாதது அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், நாட்டில் இரண்டாம் தர குடிமக்களை போன்று ஆக்குவதாகவும் வழக்கை தொடுத்த தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம், தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என அரசு கூறுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.