கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கும் என இயேசு பணித்துள்ளார்.
நண்பர்கள், நட்பு வட்டம் என்பது மிகுந்த நம்பிக்கைக்குரியதாகும்.
நண்பர்களுக்கிடையில் நிலவும் உறவுகள் மற்றும் உதவிகள் தொடர்பில் பரிசுத்த வேதாகமம் பல்வேறு நூல்களிலும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா நற்செய்தி ஒரு சிறந்த உவமையை நமக்கு தெரிவிக்கின்றது.
“இயேசு சீடர்களை நோக்கி கூறியது;
உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று ‘நண்பா மூன்று அப்பங்களை எனக்கு கடனாக கொடு என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கின்றார்.
அவருக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம்.
உள்ளே இருப்பவர் “எனக்குத் தொல்லை கொடுக்காதே ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள் நான் எழுந்திருந்து உனக்கு தர முடியாது” என்பார்.
எனினும் அவர் விடாப்பிடியாக கதவைத் தட்டிக் கொண்டே இருந்தால் அவர் தன் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும் தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்கு தேவையானதை கொடுப்பார் என நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.
மேலும் நான் உங்களுக்கு சொல்கிறேன் “கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள் நீங்கள் கண்டறிவீர்கள். தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லோரும் பெற்றுக் கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர்.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களில் எந்த தந்தையாவது மீனுக்கு பதிலாக பாம்பை கொடுப்பாளா முட்டையை கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தன்னிடம் கேட்போருக்கு தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி.”என அந்த உவமை சிறந்த படிப்பினையை நமக்கு தருகின்றது.
நண்பர்களுக்கு இடையில் உள்ள அன்பு அபரிமிதமானது. தன் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பது உயர்ந்த தியாகம் என்பதை வரலாறுகள் வலியுறுத்துகின்றன. நம் வாழ்க்கையில் நம்மோடு கூட பயணிக்கும் ஆண்டவர் இயேசுவும் நமக்கு தக்க சமயத்தில் சிறந்த தியாகமிக்க நண்பராகவே திகழ்கின்றார்.
நமது பாவங்களுக்காக அவர் தம் உயிரையும் ஈந்தார்.
அவருக்கும் நமக்கும் இடையிலான நட்பை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் எமக்கு கூறியது போல “சிறியோர் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்கின்றீர்களோ அதை எனக்கே செய்கின்றீர்கள். என்ற அவரது அன்பு கட்டளையை நாம் அவ்வாறே கடைப்பிடித்தால் போதுமானது. எமது நண்பர்களுக்கு இடையிலும் நட்பு வட்டத்திலும் அத்தகைய தன்மையை வளர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிப்போம்.
எல்.ஜொனதன்