ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு இம்மாநாடு நடைபெறவுள்ளது. கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த விசேட மாநாட்டை உள்ளரங்கில் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
மாநாட்டின் போது கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்படும் என நம்புகிறோம் என்றார். கடந்த ஆண்டு மாற்றத்திற்கு அழைப்பு விடுத்த இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, ஐக்கிய தேசியக் கட்சி புதிய தீர்மானங்களை நிறைவேற்றி புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சி கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் என பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். இம்மாற்றங்களினூடாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நாட்டின் விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் அதிக இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.