2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பாடசாலை மாணவியான தருசி கருணாரத்னவிற்கு கண்டியில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
கண்டி சிட்டி சென்டர் வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே பிரதம அதிதயாகக் கலந்து கொண்டார்.
இப்பாராட்டு வைபவத்தை வலல ஏ.ரத்நாயக்கா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதுடன் 400×4 அஞ்சலோட்டப் போட்டியில் ஒரு அங்கத்தவராக இருந்து வெண்கலப்பதக்கம் ஒன்றையும் வென்றார்.
2022 ல் கொலம்பியாவில் இடம் பெற்ற சர்வதேச கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்கெடுக்க தருசி கருணாரத்ன சென்ற போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அது தொடர்பாக விளையாட்டு அமைச்சருடன் தொடர்பு கொண்டு உதவி செய்ததை ஆளுநர் நினைவுபடுத்தினார். அது தொடாபாக தருசியை மற்றுமன்று அவரது பயிற்றுவிப்பாளர் சுசந்த பெர்னாண்டோவையும் பாராட்டியதையும் நினைவு படுத்தினர். இச்சம்பவங்கள் தருசி உயர் நிலை அடைய ஒரு ஊக்குவிப்பாகவும் அமைந்ததாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அக்குறணை குறூப் நிருபர்