Home » டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு அனைத்து இலங்கையருக்கும் கிடைக்க வேண்டும்

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு அனைத்து இலங்கையருக்கும் கிடைக்க வேண்டும்

- தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு 2023 இல் ஜனாதிபதி தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
October 13, 2023 5:24 pm 0 comment

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்குரிய அடிப்படை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் துடிஜிட்டல் மயறையின் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதோடு, தனியார் துறையினருக்கு கிட்டாத வாய்ப்புக்களில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்பதே தன்னுடையதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறைந்தளவான வளங்களை கொண்டுள்ள தருணத்திலேயே, டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு 2023 (NITC – 2023) இல் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நிலையான டிஜிட்டல் சமூகத்தை நோக்கி – 2030 டிஜிட்டல் பொருளாதாரம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை கணினி சங்கம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரு நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

2030 இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான துறைசார் நிபுணர்கள் மற்றும் அறிவியலாளர்களினால் 6 துறைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இலங்கையில் “டிஜிட்டல் வழிக்காட்டல் வரைவு (Digital Roadmap and the policy Framework)” இனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி வைத்தார்.

அதேபோல் விவசாய நவீனமயப்படுத்தலுக்காக விவசாய அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இணைந்து, விவசாய மற்றும் தொழில்நுட்ப துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரித்திருக்கும் ” மேம்படுத்தப்பட்ட விவசாய மாற்றம் (Iintergrated Digital Agriculture Transformation)” என்ற அறிக்கையை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பட்டப்பின் பட்டதாரிகள், வியாபாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கல்வி உள்ளிட்ட மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப துறைசார் ஆய்வுகளுக்கான விருதுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க;

“மனித வள அபிவிருத்தி துறையில் அனைத்து விடயங்களையும் நாம் உள்வாங்கியுள்ளோம். அடுத்ததாக மனிதவள மூலதனத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்ற பிரச்சினைக்கு எழுந்துள்ளது. இன்று இங்கு முன்மொழியபட்ட இரு அறிக்கைகளையும் செயற்படுத்தும் முன்பாக அது தொடர்பாக ஆராய்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்க்கிறோம்.

மனித மூலதனத்தை போன்றே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் சவாலாகியுள்ளது. அதேபோல் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைந்தளவான வளங்களுடனேயே நாம் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் தனியார் துறையினரின் தனிப்பட்ட முதலீடுகள் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். தனியார் துறையினால் அடைந்துகொள்ள முடியாத விடயங்களில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும்.

அதற்கமைய டிஜிட்டல் வசதிகள் தொடர்பிலான எமது கொள்கை மேற்படி விடயத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும். அதேபோல் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. அதன் பின்னர் அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி நகர வேண்டும். அதேபோல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பவர்களும் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் முதலீடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளது. அதற்குரிய டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன் முதல் அத்தியாயத்திற்காக தனியார் துறைமீது தங்கியிருக்க வேண்டிய அதேநேரம், அதனால் 40 – 50 சதவீதம் வரையிலான சனத்தொகைக்கு போதியளவான உட்கட்டமைப்பு வசதிகள் கிட்டும். அதனை விரைவில் 60 சதவீதமாக அதிகரித்துக்கொள்ளவும் முடியும். அதன் பின்னர் படிப்படியாக முன்னேற்றிச் செல்ல முடியும்.

அடுத்ததாக நிதித்துறையின் மூலதனத்தை பெற்றுக்கொள்ளும் இயலுமை தொடர்பில் ஆராய வேண்டும். போதியளவு மூலதனம் உள்ளமையை உறுதிப்படுத்தவே நாம் வங்கிகளை மறுசீரமைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளோம். அதனால் மிஞ்சும் நிதியை குறித்த துறைக்காக பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதனால் தற்போதுள்ளதை விடவும் மாறுபட்ட நிதித்துறை ஒன்று எமக்கு அவசியப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையில் டிஜிட்டல் தொடர்பாடல் ஒன்று இருக்க முடியாது. அதனை நாம் நனவாக்கி கொள்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும். அந்த வகையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கும் பிரவேசிக்கும் இயலுமை சகலருக்கும் கிட்ட வேண்டும்.

நீதிக் கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் பலவும் உள்ளன. சில விடயங்களை அரசாங்கத்தினாலும், சில விடயங்களை தனியார் துறையினாலும் செய்ய முடியும். அத்தோடு டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மூலதன நிதியாக்கம் மற்றும் டிஜிட்டல் அடிப்படையிலான தொடர்புகள் உள்ளிட்ட மூன்று பிரதான விடயங்களும் உள்ளன. அதனாலேயே டிஜிட்டல் மயமாக்கலுக்கான முன்னோடிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.” என மேலும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்விற்கு அழைத்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,

“டிஜிட்டல் மயமாக்கம் வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறுவதோடு, அதற்கான வழிக்காட்டல் வரைவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திட்டமானது பேராசிரியர் ஒருவரின் தலைமையில், விரிவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் கேந்திர நிலையங்களாக விவசாயச் சேவை மத்தியஸ்தானத்தை பயன்படுத்த எதிர்பார்த்திருப்பதோடு, இதன்போது தனியார் துறை, அறிவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவற்றை ஒரு கூரையின் கீழ் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு அவசியமான ஆலோசனைகளும், இயந்திர பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

அதன் கீழ் தற்போது 3.5 மெற்றிக் டொன்களாக காணப்படும் நெல் உற்பத்தியை 7 மெற்றிக் டொன்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் விவசாய மாற்றத்தின் ஊடாக விவசாய துறையின் காணிகள், நீர்பாசனங்கள், பெருந்தோட்ட மற்றும் மீன்பிடி உள்ளிட்ட துறைசார்ந்த பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் வகையில் விவசாயத்திற்கு தேவையான தகவல்கள் மாற்றுவதற்கான டிஜிட்டல் களமொன்றை கட்டமைக்க எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்துறையிடமிருந்து ஜனாதிபதியின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அதேபோல் விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் காணி, மீன்பிடி, பெருந்தோட்ட, அரச நிர்வாக அமைச்சுக்களுடன் இணைந்து தொழில்நுட்ப அமைச்சு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் கீழ் வலுவான தகவல், தீர்மானங்களை முகாமைத்துவம் செய்யும் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் (GPRS) தொழில்நுட்பத்தை மையப்படுத்தி தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தொழில்நுட்ப வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்துவதற்கான முழுமையான தீர்வு மற்றும் அதற்கமைவான சூழலைப் பலப்படுத்த விவசாய தகவல் தொழில்நுட்ப முன்னோடியொருவரை அறிமுகப்படுத்தும் அதேநேரம் அரசாங்க நிறுவனங்களின் கொள்ளளவும் அதற்கு இணையாக அதிகரிக்கும்.

அதற்கான மூலோபாய திட்டமிடல் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்படி தரவுகளை மையப்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்வதற்கான. “டேஷ்போர்ட்” கட்டமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.” என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

2023 மார்ச் மாதத்தில் 10 துறைகளை உள்ளடக்கி DIGIECON 2030 திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவற்றில் 70% அதிகமான துறைகளை உள்வாங்கியுள்ளோம். அவற்றில் பல விடயங்கள் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டுள்ள போது, பல்வேறு காரணங்களினால் அவற்றை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது. அதன்படி இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான 2030 வழிகாட்டல் வரைவினை பாராளுமன்ற ஆலோசனை செயற்குழுவில் சமர்பித்த பின்னர் மக்கள் கருத்தறிவதற்காக வெளியிடுவோம்.

அதன் பின்னர் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மேற்படி அறிக்கையை அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிப்போம்.

எமது டிஜிட்டல் வழிகாட்டல் வரைவு மற்றும் தொழிற்சாலைகளின் ஒத்துழைப்புடனும் உலக வங்கியின் உதவியில் மேம்படுத்தப்படும் கொள்கை வரைவு பிரதான 6 தூண்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி, (SLIIT) நிறுவனத்தின் கிளையொன்றினை கண்டியில் திறந்துவைத்தார். இதன்போது அங்குள்ள மாணவர்களின் புத்தாக்கங்கள் வியப்பூட்டும் வகையில் இருந்தோடு, விவசாய துறையில் அவற்றை பயன்படுத்துவதற்கான அவர்களின் ஆர்வமும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

அதனால் தகவல் தொழில்நுட்ப துறையில் அறிவிமிக்க பலரும் இலங்கையில் உள்ளனர் என்பதோடு, அதனை பயன்படுத்தி இலங்கையை அபிவிருத்தி செய்வதோடு எமது சேவைகளையும் பலப்படுத்த வேண்டும்.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, அருந்திக்க பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோருடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எம்.பீ.குணவர்தன, தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், தகவல் தொழில்நுட்ப துறையின் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT