பிளவுபட்டு செயற்பட்டு எதனையும் சாதிக்க முடியாது. கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்டால், எமது நாட்டை உலகளவில் உயர்த்த முடியுமென ஐ.தே.க. வின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.
வைராக்கியம் மற்றும் குரோத மனப்பான்மையுடன் செயற்பட்டால், நாடு மேலும் பின்னடைவையே சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
1948 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றுக் கொண்ட நாள் முதல் 75 வருடங்களாக தவறிழைத்த இனமாகவேயுள்ளோம். அதன் உச்சமாக கடந்த வருடத்தைக் குறிப்பிட முடியும்.
அவ்வாறானால் அந்தத் தவறை திருத்திக் கொள்வது அவசியமென தற்போதைய ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்து வருகிறார்.
அவர் ஜனாதிபதிப் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற அழைப்பை விடுத்து வருகின்றார்.
அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் நாம் ஆசியாவிலும் உலக ரீதியிலும் உயர்ந்த மக்களாக ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. எவ்வாறாயினும் இடம்பெற்றுள்ள தவறுகள் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தவறு அல்ல. அனைவரதும் தவறாகும். அவ்வாறானால் நாம் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.எமது நாட்டில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 75 கட்சிகள் உள்ளன.
இது தொடர்பில் நாம் வெட்கமடைய வேண்டும். 2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழும் இந்நாட்டில், பெரும்பாலானவர்கள் குரோதம் வைராக்கியம் பொறாமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டே செயற்பட்டு வருகின்றனர்.நாடு, மக்கள் என சிந்திப்பது மிகவும் குறைவு. எமக்கு ஆட்சியதிகாரம் கிடைத்தால்தான் எதனையும் செய்ய முடியும் என்றே சிந்திக்கின்றனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்