இஸ்ரேல், பலஸ்தீனத்துக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளதால் வேலை வாய்ப்புக்காக இலங்கையரை இஸ்ரேலுக்கு அனுப்புவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஒரு தரப்பினர் தயாராக உள்ளனர். தற்போதைய நிலைமையில் அவர்களை அங்கு அனுப்புவது சிறந்ததல்ல. இஸ்ரேலிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய தேவை ஏற்பட்டால், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இஸ்ரேலில் வேலை வாய்ப்புக்காக செல்பவர்களுக்கு புதிய நடைமுறையைப் பின்பற்ற வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த பணியகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அந்த பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில், இனி வரும் காலங்களில் இஸ்ரேலுக்கு இலங்கையரை வேலை வாய்ப்புக்காக அனுப்பும்போது அந்நாட்டின் சனத்தொகை, புலம்பெயர்வு அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார,
இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் அங்கு வாழும் இலங்கையர் நாட்டுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்தால், அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்