தமிழ் சமுதாயத்தில் எஞ்சியுள்ள மிகப்பெரிய பலம் கல்வி ஆகும் என்பதை எமக்கு என்றுமில்லாதவாறு உணர்த்தும் காலம் இதுவாகும். ஆகவே, தமிழர் கல்வித் துறையை போற்றி பாதுகாத்து, பலவீனமான புள்ளிகளை அடையாளம் கண்டு, கூட்டிணைந்து நாம் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் தமிழர் கல்வி மேம்பாட்டு கழகத்தின் போசகராக மனோ கணேசனும், தலைவராக ப. பரமேஸ்வரனும், செயலாளராக திருமதி. கே. நிரஞ்சனும், நிதி செயலாளராக எம். ஜெயப்பிரகாஷும் நியமிக்கப்பட்டார்கள். ஏனைய பதவிகளுக்கான நியமனங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. பேராசிரியர் டி. தனராஜ், தொழில்நுட்ப அமைச்சு பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி க. பத்மநாதன், தொழில்நுட்ப கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. குருமூர்த்தி ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தேசிய, மாகாண சபை மற்றும் தனியார் கல்வி கட்டமைப்பில் தமிழர் கல்விக்கான சமத்துவ வாய்ப்புகள் இன்மை, ஆளணி, பெளதிக வளம், அதிபர் தராதரங்கள், விஞ்ஞான, கணித, ஆங்கில, தொழில்நுட்பவியல் ஆகிய (STEM) பாடங்களுக்கான தமிழ் மொழி ஆசிரியர்களின் கடும் பற்றாக்குறை, தமிழ் மாணவர்களின் இடை விலகல், தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி தொடர்புகளில் தமிழ் மாணவர்களின் ஆர்வமின்மை, மூன்றாம் நிலை கல்வி, மேற்கல்வி, இடைநிலை கல்வி மற்றும் தொழில் பயிற்சி ஆகியவற்றுக்கான பாடசாலை மட்டத்திலான கல்வி வழிகாட்டல் (Career Guidance), தமிழ் மொழியிலான முன்பள்ளி கல்வி, பொது கல்வித்துறை தரவுகளை சேகரித்தல், முறைப்பாடுகளை ஒருமுகப்படுத்தி தீர்வு தேடல் ஆகிய விடயங்களை, நாம் இன்றைய இந்த முதல் சந்திப்பிலேயே ஆராய ஆரம்பித்துள்ளமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்றது எனவும் மனோ கணேசன் எம்.பி இதன்போது தெரிவித்தார்.