இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் உபாதைக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 122 ஓட்டங்களை பெற்ற குசல் மெண்டிஸ் மைதானத்தில் இருந்து அரங்கு திரும்பும்போது தசைப்பிடிப்பு உபாதைக்கு உள்ளாகியுள்ளார். இதனை அடுத்தே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனால் பாகிஸ்தானுடனான போட்டியில் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை என்பதோடு அவருக்கு பதில் சதீர சமரவிக்ரம விக்கெட் காப்பாளராக செயற்பட்டதோடு துஷான் ஹேமன்த களத்தடுப்பில் ஈடுபட்டார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 345 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை எட்டியது.
இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் உபாதை காரணமாக உலகக் கிண்ணத்தில் இடம்பெறவில்லை என்பதோடு சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன உபாதைக்குப் பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியிருந்தார்.
எனினும் குசல் மெண்டிஸின் காயம் தீவிரம் இல்லை என்று நம்பப்படுகிறது.