பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (10) இடம்பெறும் உலகக் கிண்ணத்தின் எட்டாவது போட்டியில் குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் பெற்று உலகக் கிண்ணத்தில் அதிவேக சதம் பெற்ற இலங்கை வீரராக சாதனை படைத்தார்.
ஹைதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன அணிக்குத் திரும்பிய நிலையில் வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் குசல் பெரேரா டக் அவுட் ஆனபோதும் அடுத்து வந்த குசல் மெண்டிஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.
இதன்போது அவர் 65 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் சதம் பெற்றார்.
இதன்மூலம் 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக குமார் சங்கக்கார 70 பந்துகளில் சதம் பெற்று உலகக் கிண்ணத்தில் அதிவேக சதம் பெற்ற இலங்கை வீரர் என்ற சாதனையையே குசல் மெண்டிஸ் முறியடித்தார்.
மெண்டில் 77 பந்துகளில் 122 ஓட்டங்களை பெற்றார்.
அதேபோன்று அபாரமாக துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம ஒருநாள் போட்டியில் தனது கன்னி சதத்தை பெற்றார். 89 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 108 ஓட்டங்களை பெற்றார். ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க அரைச் சதம் ஒன்றை பெற்றிருந்தார். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை பெற்றது.