கொரோனா தொற்று பரவிய காலப்பகுதியில் பின்னடைவு கண்டிருந்த அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழிற்றுறையானது தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இம்முயற்சிகளுக்கு கடற்றொழில் அமைச்சும், நெக்டா நிறுவனமும் கூடுதல் கவனமெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தப்பிரபோன் நிறுவனத்தினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அக்கியுவா பியஸ்டா” எனும் அலங்கார மீன்கள் கண்காட்சி நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – நன்னீர் வேளாண்மைக்காக நெக்டா நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நூறு மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளார். இந்நிதியிலிருந்தும் அலங்கார மீன்வளர்ப்புத் துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கப்படும். அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஏற்மதித் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்ட வேண்டும். இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சுடன் இணைந்து செயலாற்றுவதன் அவசியத்தையும் இதன்போது அமைச்சர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.