உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் தொடரில் யெமனுக்கு எதிரான முதல் கட்டப் போட்டிக்காக 23 பேர் கொண்ட இலங்கை கால்பந்து அணியை இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த தகுதிகாண் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
பிஃபா தடை விதிக்கப்பட்ட நிலையில் இலங்கை கால்பந்து அணி சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்னரே கால்பந்து போட்டியில் களமிறங்கவுள்ளது. பிஃபா தடை தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கை அணி தலைமை பயிற்சியாளர் அன்டி மொரிசனின் கீழ் பயிற்சிக்காக ஒன்றிணைந்துள்ளது.
இலங்கை கால்பந்து அணி அறிவிக்கப்பட்டபோதும் அணித் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி வெல்லும் பட்சத்தில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 250,000 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது கட்டத்தில் வெற்றியீட்டினாலும் இதே தொகை வழங்கப்படவுள்ளது. இலங்கை அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் வீரர்களுக்கு மேலும் 250,000 வழங்கப்படவுள்ளது. யெமனுக்கு எதிரான இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நடைபெறவுள்ளது.
இலங்கை குழாம்: சுஜான் பெரேரா, பிரபாத் ருவன் அருணசிறி, நிகலஸ் ஹர்ஷ பெர்னாண்டோ, சரித் பண்டார ரத்னாயக்க, சலன சமீர, ஆசிகுர் ரஹகுமான், பைசர் மொஹமட் அமான், கவீஷ் லக்பிரிய பெர்னாண்டோ, ஷெஹால் சந்தோஷ் பிங்கோ, மரியதாஸ் நிதர்ஷன், நெளஷாத் அபீல் மொஹமட், ஜூட் சுபன், பைசல் மொஹமட் ஆகிப், வசீம் ராசிக், நசீர் மொஹமட் ஷிபான், சதுரங்க மதுஷன், மொஹமட் ஷபீர், சமோத் டில்ஷான், ரிப்கான் மொஹமட், கவிந்து இஷான், நைசர் மொஹமட் பஸால், சேனன் டி சில்வா மற்றும் ஆரிஸ் மொஹமட் ஹஸ்மீர்.