கொழும்பில் பாதுகாப்பற்றதாக அடையாளம் காணப்பட்ட 08 தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளை உடனடியாக மீள் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வீட்டுத் தொகுதிகள், அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டங்களாக மீள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக குடியிருப்பு வாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் தொடர் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொரளை சஹஸ்புர தொடர்மாடி குடியிருப்பில் இந்த செயலமர்வு நடைபெற்றது. கூட்டு ஆதன சொத்துக்களின் பாதுகாப்பு, அதன் சரியான பயன்பாடு, மற்றும் பொதுவான வசதிகளின் பராமரிப்பு குறித்து வீட்டு உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
20 வருடங்கள் பழமையான பொரளை சஹஸ்புர தொடர்மாடி குடியிருப்பு கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு என்பதுடன் இதில் 676 வீடுகள் உள்ளன.
கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற வீட்டுத் திட்டங்களாக வேகந்த வீடமைப்புத் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை வீடமைப்புத் திட்டம், கம்கருபுர வீடமைப்புத் திட்டம், மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டத்தின் பல கட்டடங்கள், மிஹிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 869 வீடுகளும் 619 கடைகளும் உள்ளடங்குகின்றன. இங்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்களை மாற்று இடங்களுக்கு அனுப்பி விட்டு மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தலைவர் மேலும் குறிப்பிட்டார்.