ஹெம்மாதகம, பெரியபள்ளிவாசல் நிர்வாகமும் அதன் கிளை நிறுவனங்களும் ஏற்பாடு செய்திருந்த மீலாத் விழாவும், மாற்று மதத்தவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வும் சல்மா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றன.
ஹெம்மாதகம பிரதேசத்தில் உள்ள பௌத்த விஹாராதிபதிகள், இந்துக்கோயில் குருமார், பிரதேச சிங்களப் பாடசாலை அதிபர்கள், உயர்வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் பௌத்த மதத்தலைவர்கள், சிவில் சமூக நிறுவனங்களின் உறுப்பினர்கள், பொலிஸ் உயர்அதிகாரிகள், பிரதேசத்தின் ஏனைய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தேர்ந்தெடுத்த பிரமுகர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பிரதம அதிதியாக சப்ரகமுவ மாகாண ஆளுநரின் செயலாளர் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக கேகாலை மாவட்ட செயலாளர் ரஞ்சன ஜயசிங்ஹவும், விஷேட அதிதியாக மாவனல்லை பிரதேச செயலாளர் விஜானி ரத்னசேகரவும், விஷேட பேச்சாளர்களாக அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன் மற்றும் அஷ்ஷெய்க் சாஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை பெரியபள்ளிவாசல் தலைவர் அஷ்ஷெய்க் ரிழ்வான் இஸ்லாஹி நிகழ்த்தினார். அதிதிகளும் விஷேட (சிங்கள மொழி) பேச்சாளர்களும் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், அவரது வழிகாட்டல்கள் இன்றைய காலகட்டத்திற்கு எவ்வாறு பொருந்துகின்றன எனவும் விளக்கமளித்தனர்.
அதிதிகளின் உரையைத் தொடர்ந்து அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வரலாற்று (சிங்கள மொழி) நூலும் வழங்கி வைக்கப்பட்டன.
நன்றியுரையை பெரிய பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.எம்.எம். பவ்ஸர் (உபஅதிபர்,அல் அஸ்ஹர் கல்லூரி) ஆற்றியிருந்தார். நிகழ்ச்சிகளை ருஷ்தி ஹாதி தொகுத்து வழங்கினார்.
நியாஸ் ஸாலி