பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் காணி மீட்புக்காகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தெரிவித்தார்.
அக் /அல் – முனவ்வறா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் பிரதேசத்தினதும் , அம்பாறை மாவட்டத்தினதும் அபிவிருத்திக்காகவும், காணி மீட்புக்காகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்தவகையில் காணி விவகாரத்தில் வெற்றிப் பெற்று அப்பகுதியிலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்துள்ளோம்.அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள் பொய்களையும், புரட்டுக்களையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்., அதனை நாம் கருத்திற் கொள்வதில்லை. மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எமது இலக்காகும். பொத்துவில் பிரதேசத்திலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குறைகளை தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருக்காமல் நிறைகளைப் பேசும் மக்களாக நாம் மாறவேண்டும்.
வெளிப்பிரதேசங்களிலிருந்து வந்து நமது மண்ணில் கற்பிக்கும் ஆசிரியர்களை கெளரவமாக மதிக்க வேண்டும். அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுதான் நமது மாணவர்களுக்கு கல்வியைப் போதிக்கின்றனர். கடந்த காலங்களை விட இப்போது ஆசிரியர் பற்றாக்குறை ஒரளவு குறைந்துள்ளது. தொடர்ந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)