Friday, March 29, 2024
Home » பல்கலைக்கழகம் செல்லாதோருக்கு தொழில் கல்லூரிகளில் பயில வாய்ப்பு

பல்கலைக்கழகம் செல்லாதோருக்கு தொழில் கல்லூரிகளில் பயில வாய்ப்பு

by sachintha
October 3, 2023 10:30 am 0 comment

பல்கலைக்கழகங்களுக்கு தெரி வாக முடியாத மாணவர்கள் சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் 17 வகையான அடிப்படை தொழில் தகைமை கல்லூரிகளில் அலவன்ஸுடன் தாதியம், நிறைவு காண் தொழில் வல்லுனர் மற்றும் துணைமருத்துவ பாடநெறிகளைக் கற்பதுடன் கற்று முடிந்தவுடன் உடனடியாக அரச , தனியார் மருத்துவத் துறைகளில் நல்ல சம்பளத்ததுடன் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும் உண்டு என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் உயர் தரத்தில் உயிரியல், கணிதத் துறைகளைத் தெரிவு செய்து கற்கும் மாணவர்கள் குறைவு இதனால் வடக்கில் அரச தனியார் சுகாதார, மருத்துவ சேவை நிறுவனங்களுக்குரிய மனித வளங்களுக்கு ஏனைய மாகாணங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மேலும் தெரிவித்திருப்பதாவது

வடக்கில் அரச தனியார் சுகாதார, மருத்துவ சேவை நிறுவனங்களுக்குரிய மனித வளங்களுக்கு பற்றாக் குறை காணப்படுகின்றது.

தொழில்களுக்கு தகைமையானவர்கள் இல்லாமையால் வேறு மாகாணங்களில் தங்கியிருக்கும் நிலைமையும் மறுபுறம் தொழில் வாய்ப்புகள் அற்ற துறைகளில் உயர் கல்வியைக் கற்ற பின்னர் வேலைவாய்ப்பின்மை, கடன் சுமைகளால் தற்கொலை செய்து கொள்ளும் இளையோரின் எண்ணிக்கையும் வடக்கில் அதிகரித்தும் வருகின்றது.

வடக்கில் உள்ள மாணவர்கள் உயிரியல், கணிதத் துறைகள் சித்தியடைவதற்கும் பல்கலைக்கழகம் செல்வதற்கும் கடினமான துறைகள் அல்ல என்பதனை மீண்டும் ஒருமுறை 2022/23 உயர்தர பெறுபேறுகள் நிரூபித்துள்ளன.

பாடசாலை மாணவர்களில் உயிரியல் துறையில் வடமாகாணம் அதிகூடிய சித்தி வீதத்தையும் கணிதத் துறையில் இரண்டாவது அதிகூடிய சித்திவீதத்தையும் 2022/2023 உயர்தரப் பெறுபேறுகளில் நிலைநாட்டியுள்ளது.

உயிரியல் துறையில் உயர்தரம் கற்று உயர்தரத்தில் 3s பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் 35 வகையான பாடநெறிகளை கற்கக் கூடிய நிலைமை 2021/2022 இருந்தது. இது இந்த 2022/2023 இல் மேலும் அதிகரிக்கும்.

ஒருவேளை பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாக முடியாத மாணவர்கள் சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் 17 வகையான அடிப்படை தொழில்தகைமை கல்லூரிகளில் அலவன்ஸுடன் தாதியம், நிறைவு காண் தொழில் வல்லுனர் மற்றும் துணைமருத்துவ பாடநெறிகளைக் கற்பதுடன் கற்று முடிந்தவுடன் உடனடியாக அரச தனியார் மருத்துவத் துறைகளில் நல்ல சம்பளத்ததுடன் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும் உண்டு.

எனவே இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் சிந்தித்து மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக வைத்திருக்கவல்ல பாடநெறிகளை உயர்தரத்தில் தெரிவு செய்து மாணவர்கள் கற்பதனை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(தலைமன்னார் விஷேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT