திருகோணமலை மாவட்ட கந்தளாய் – சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் கட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து முதலையொன்று கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் (30) மாலை கந்தளாய் – சூரியபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த முதலை சுமார் ஏழு அடி நீளம் கொண்டவையாகுமென வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுப் பகுதிக்கு நாவைப்பழம் பறிக்கச் சென்ற இளைஞர்கள் குழு முதலையை கண்டு சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸார் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் விழுந்துகிடந்த முதலையை மீட்டெடுத்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மகாவலி ஆற்றில் விடப்பட்டதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.