அமானா வங்கி தனது எதிர்வரும் உரிமைப் பங்கு வழங்கல் தொடர்பான திகதிகளை கொழும்பு பங்குப்பரிவர்த்தனைக்கு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட பொதுக்கூட்டத்தின் போது 1:1 விகிதாசார உரிமைப் பங்கு வழங்கல் தொடர்பில் பங்குதாரர்களின் ஏற்பளிப்பை பெற்றுக் கொள்வதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு XR திகதியானது நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு செய்தல் மற்றும் தற்காலிக ஒதுக்கீடுக்கான திகதியாக செப்டெம்பர் 26ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீடு பற்றிய கடிதங்களை ஒக்டோபர் 5ஆம் திகதியளவில் அனுப்பி வைப்பதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. உரிமைப் பங்கு வழங்கல் வியாபாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், CDS க்கு அதிகாரத்துறப்புக்கான இறுதித் திகதி ஒக்டோபர் 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிமைப் பங்கு வழங்கலுக்கான ஏற்றுக் கொள்ளல் மற்றும் கொடுப்பனவுகளை ஒக்டோபர் 24 வரை ஏற்றுக்கொள்ளும்.
உரிமைப் பங்கு வழங்கல் திகதிகள் தொடர்பில் வங்கியின் பிரதம நிதி அதிகாரி அலி வாஹிட் கருத்துத் தெரிவிக்கையில், “எமது நிதிசார் அடிப்படையை மேலும் உறுதி செய்வதற்கான தீர்மானமிக்க படிமுறையாகவும், எமது வளர்ச்சியை வழிநடத்தும் நடவடிக்கையாகவும் உரிமைப் பங்கு வழங்கல் அமைந்துள்ளது. பங்குதாரர்களின் பெறுமதியை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்பை நாம் கொண்டுள்ளதுடன், எமது பெறுமதி வாய்ந்த முதலீட்டாளர்கள் மத்தியில் உரிமை வழங்கல் என்பது சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
இந்த உரிமைப் பங்கு வழங்கலினூடாக ரூ. 6.7 பில்லியனை பங்கு மூலதனமாக திரட்டுவதற்கு அமானா வங்கி எதிர்பார்த்துள்ளது. வங்கியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இது அமைந்துள்ளது. பங்கொன்றுக்கு ரூ. 2.30 வீதம், மொத்தமாக 2,902,267,365 சாதாரண வாக்குரிமை பங்குகளை வங்கி வழங்க எதிர்பார்த்துள்ளது. இதனூடாக முதலீட்டாளர்களுக்கு, அமானா வங்கியின் மூலோபாய வளர்ச்சி இலக்குகளில் கவர்ச்சிகரமான பங்களிப்பை வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்டுவரும் நிதிச்சூழலில் வங்கியின் நிலையை மேலும் உறுதி செய்வதாக இந்தச் செயற்பாடு அமைந்திருக்கும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.