Saturday, April 20, 2024
Home » ஆசிய விளையாட்டுப் போட்டி; 400 மீற்றர் ஓட்டத்தில் நதீஷாவுடன் காலிங்க, அருண இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டுப் போட்டி; 400 மீற்றர் ஓட்டத்தில் நதீஷாவுடன் காலிங்க, அருண இறுதிப் போட்டிக்கு தகுதி

- கொல்ப் போட்டியில் இரண்டாவது சுற்றில் நடராஜ் தங்கராஜ் 141 புள்ளிகளுடன் 36 ஆவது இடம்

by Rizwan Segu Mohideen
September 30, 2023 8:04 am 0 comment

சீனாவின் ஹான்சோ நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் நதீஷா ராமநாயக்க தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (29) ஆரம்பமானது. இதில் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற நதீஷா ராமநாயக்க 52.67 வினாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து இரண்டாவது இடத்தை பெற்றார்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றதோடு இதில் நதீஷா ஒட்டுமொத்த 18 வீராங்கனைகளில் 3ஆவது இடத்தை பிடித்தார்.

இதில் முதலிடம் பிடித்த பஹ்ரைன் வீராங்கனை ஒலுவகெமி முஜிதத் 50.53 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தார். இதன் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற காலிங்க குமாரகே 45.57 வினாடி போட்டியை நிறைவு செய்து முதலாம் இடத்தை பிடித்தார். மற்றொரு ஆரம்ப சுற்று போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன 46.07 விநாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இதில் ஒட்டுமொத்த வீரர்களான 22 வீரர்களில் மூன்றாவது இடத்தை காலிங்க குமார பிடித்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அதேபோன்று அருண 8 ஆவது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதனிடையே கொல்ப் போட்டியில் இரண்டாவது சுற்றில் நடராஜ் தங்கராஜ் 141 புள்ளிகளுடன் 36 ஆவது இடத்தை பெற்றிருப்பதோடு, அநுர ரோஹன மற்றும் மிதுன் பெரேரா தலா 145 புள்ளிகளையும் கே. பிரபாகரன் 150 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

அணிகள் பிரிவில் இலங்கை அணி 13 ஆவது இடத்தில் இருப்பதோடு அந்த அணி 431 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்கள் நேற்று முன்தினம் 213 புள்ளிகளை பெற்றதோடு நேற்று மேலும் 218 புள்ளிகளை பெற்றனர். இந்த போட்டிகளில் இன்று ஒற்றையர் மற்றும் அணிகளின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சஹன் ஆரச்சிகே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி நாளை (01) சீனா வரவுள்ளது. இலங்கை கிரிக்கெட் போட்டியில் காலிறுதிப் போட்டியில் இருந்தே பங்கேற்கவுள்ளது. இலங்கை அணியின் காலிறுதிப் போட்டி வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6 ஆவது நாளான நேற்று சீனாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 100ஐ நெருங்கி முதல் இடத்தில் உள்ளது. தென் கொரியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

9 ஆண்டுகளின் பின் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்ற இலங்கை பதக்கப் பட்டியலில் தற்போது 25ஆவது இடத்தில் உள்ளது.

சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT