இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
உலகிற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட, சகல மனிதர்களும் செயல்களில் மிகச் சிறந்த செயலை ஆற்றுவதற்கு வழிகாட்டிய, காலங்களால் மாறாத உன்னத போதனைகளை மானிடத்திற்கு ஒப்புவித்த முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் என்றென்றும் போற்றத்தக்கவர்.
“நம்பிக்கைக்குரியவர்”,
“அடைக்கலம் அளிப்பவர்”, “வாய்மையாளர்” எனப் பொருள்படும்,”அல் அமீன்” எனும் சிறப்புப் பெயர் கொண்டு அவர்மீது அன்பு கொண்ட பொதுமக்களால் அழைக்கப்பட்டார் நபிகளார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும்,
ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் இறைதூதர் முஹம்மது நபி.
அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும்,சிறந்த அறிவுரைகளும்,செழுமையான வழிகாட்டுதல்களும், வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, பொன்னைப்போல் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும்.
இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அவரின் நம்பிக்கையாகும்.
இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிடத் தேவையில்லை என்றும், மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார்.
இஸ்லாத்தின் தூதைப் போலவே அவரது போதனைகளும் உலக வாழ் மக்கள் அனைவரையும் சார்ந்ததாக அமைந்துள்ளன. அன்னாரது போதனைகள் காலத்தால் முன்மாதிரிமிக்கவை.
நபிகளார் ஆன்மீகத்துறையில் மட்டுமன்றி சமூகவியல் ஒழுங்கிலும் மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்தவராவார்.
அவர்கள் நிகழ்த்தி ய மது ஒழிப்பு, பாலின சமத்துவத்திற்கான நடவடிக்கை,வர்த்தக வியாபார நடவடிக்கைகள் குறித்து எண்ணிப்பாருங்கள்.இன்றும் வட துருவ நாடுகள், தென் துருவ நாடுகள் என்று உலகமே இதற்கான நிலைபேறான தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது.
நிலைபேறான போதனைகளை நபிகள் நாயகத்தின் வாழ்வியலை வாசிக்கும் போது நுகர்ந்து கொள்ளலாம்.
அன்னாரது போதனைகளை வாழ்வியலாக்க இந்நாளில் உறுதிபூணுவோம்.
நன்மைகளின் பக்கமும், நலவுகளின் பக்கமும் விரையுமாறு போதித்த அன்னார், வெறுமனே ஆன்மீகத்துடன் மாத்திரம் வரையறுக்காது சமூகவியல் பரப்பில் செயலாற்றுகைக்கான உந்துதலையும் வழங்கினார்.நாட்டில் நலவுகளை மேலோங்கச் செய்ய நபிகள் நாயகம் வழங்கிய போதனைகள் பொருட்பொலிவு மிகுந்தவையாகும்.
சமாதானம், அமைதி, ஒற்றுமை,சகவாழ்வு, ஆட்சி, ஜனநாயகம் உட்பட மனித வாழ்வுக்கான சகல துறைகளிலும் நபிகளார் வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்.
அன்னாரையும் அன்னாரது உன்னத போதனைகளையும் நினைவு கூர்ந்தும் இலங்கை முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து உலக வாழ் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது “மீலாதுன் நபி” வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.