Friday, April 19, 2024
Home » ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்
இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தாது

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்

மூவின மக்களுக்கும் உரிமையுள்ளது என்கிறார் அமைச்சர்

by gayan
September 26, 2023 8:41 am 0 comment

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறலென்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்: விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்து மீண்டும் ஒரு போரை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில், அவர்கள் தமது அன்புக்குரியவர்களை அமைதியாக நினைவுகூர்வதற்கு இடமளிக்க

வேண்டும். கடந்த நல்லாட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். எனவே, திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது.

மூவின அரசியல்வாதிகளும் மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டுமே தவிர, இவ்வாறான நிகழ்வுகள் மூலம் அரசியல்வாதிகள் சுயலாபம் தேட முற்படக்கூடாது.

நாட்டில் அதிகாரத்திலிருந்த சகல அரசாங்கங்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உண்மையான முயற்சியை மேற்கொண்டிருக்கவில்லை.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும்.

தற்போதைய ஆட்சியிலும் அவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் நடத்துவதற்கு தடை போட முடியாது. ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் மூலம் தமிழ் அரசியல்வாதிகள் சுயலாபம் தேடவும் முற்படக்கூடாது.

சிங்கள மக்களை வெறுப்பேற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது. மூவின அரசியல்வாதிகளும் மூவின மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT