பாதுகாப்பற்ற மின்கம்பங்கள், மின் ஒழுக்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அவற்றை சீர்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பசறை – யூரி தோட்ட, மாப்பாகல பிரிவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தையடுத்தே அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் யூரி தோட்ட, மாப்பாகல பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பணிப்புரையை அடுத்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் மேற்படி தோட்டத்துக்கு பிரதிநிதிகள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தங்குமிட வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இக்குழு ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது. அத்துடன், அவர்களுக்கான மாற்று இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு அறிக்கையொன்றையும் கையளிக்கவுள்ளது.
தீ விபத்தால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் வீடு மற்றும் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.
இதுதொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(ஹற்றன் விசேட நிருபர்)