நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றும் புத்தள பிரதேசத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மேற்படி 16 நிலநடுக்கங்களில் 06 நில நடுக்கங்கள் புத்தள மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலே இடம்பெற்றுள்ளதாகவும் பணியகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மூன்று பூமியதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் புத்தள பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ள நிலநடுக்கம் ரிச்டர் அளவு 2.4 ஆக பதிவாகியுள்ளது.
இந்நில நடுக்கம் நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் இடம்பெற்றது. இது சிறியளவிலான இந்நில நடுக்கம் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூமியதிர்ச்சி தொடர்பான நான்கு அலகுகளிலும் பதிவாகியுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)