அச்சிடப்பட்ட நீர் கட்டண பட்டியலுக்கு பதிலாக அக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் ஒன்லைன் மூலமான இலத்திரனியல் நீர் கட்டணப் பட்டியல் முறைமையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இச்சபையின் பிரதிப் பொது முகாமை யாளர் பியல் பத்மநாத இது தொடர்பில் தெரிவிக்கையில்: தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேசங்களில் முதற்கட்டமாக இப்புதிய முறைமையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பாவனையாளர்களுக்கான நீர் கட்டணத்தை வழங்குவதில் மாற்றங்கள்
கொண்டுவரப்படவுள்ளன. பரீட்சார்த்தமாக கொழும்பு தெற்கு நகர்ப்பகுதி, கண்டி தெற்கு நகர்ப்பகுதி, திருகோணமலை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களின் 4 பிரதேச
செயலகப் பிரிவுகள் இவ்வாறு இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்த வகையில் ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் அதை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்
பாவனையாளர்கள் எவ்வித பயம்கொள்ளவும் தேவையில்லை. இதுவரை நடைமுறையில் உள்ளதைவிட முறையான வகையில் விரைவாக இதன்மூலம் நீர் கட்டணப் பட்டியல்களை நுகர்வோருக்கு வழங்க முடியும்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)