தற்போதுள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கட்டமைப்பு புதிய கணனி முறைக்கு மாற்றப்பட்டு வருவதால் (Data Migration), மத்திய மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திர விண்ணப்பச் செயன்முறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) நள்ளிரவு 12.00 மணி முதல் ஒக்டோபர் (06) நள்ளிரவு 12.00 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பிரதி பிரதம செயலாளர் ஐ.டப்ளியூ.எம்.சீ.கே. இளங்ககோன் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்லைன் மூலமான வாகன வருமான அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பது நாளை (27) முதல் இடைநிறுத்தப்படுவதோடு, அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பெறுவது ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கணனி கட்டமைப்பின் மூலம் தற்போது அந்தந்த மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் எதிர்காலத்தில் இலங்கையில் எங்கிருந்தும் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் கணனி முறைமை மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, புதிய கணனி கட்டமைப்பின் மூலம் எதிர்வரும் ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வாகன வருவாமன அனுமதிப்பத்திரம் வழங்குவதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய முதற்கட்டமாக, குறித்த அமைப்பின் செயற்றிறனை மதிப்பாய்வு செய்யும் வரை, வாகன வருமான அனுமதிப்பத்திரம் அந்தந்த மாகாணங்களில் மாத்திரம் வழங்கப்படும்.
இதன் காரணமாக நாளை (27) மற்றும் ஒக்டோபர் 02 ஆகிய இரு தினங்களில் மத்திய மாகாண போக்குவரத்து திணைக்களத்தின் மற்றும் மத்திய மாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் செப்டெம்பர் 27 முதல் ஒக்டோபர் 06 வரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத் திட்டத்திற்கு அமைய மேல் மாகாணத்திலும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.