உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர், குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் நான்காம் வார்டிலிருந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த வேளையிலே, இவ்வைத்தியர் உயிரிழந்தார்.
இரத்த அழுத்தம் அதிகரித்ததால் இவர் உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையிலிருந்த குழந்தையை மீட்ட இந்த மருத்துவரின் நிலை உயர் அழுத்தத்தால் மோசமடைந்தது. இதனால், அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இவ்வைத்தியரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐ தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்டி, அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் எனும் வைத்தியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார் .
உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால், இப்பெண் வைத்தியர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஓய்வு எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நோய் வாய்ப்பட்ட நிலேஷ் குணசேகர எனும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த அவர் இரண்டு நாட்களாக அதி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இவ்வைத்தியர் தனது சேவைக் காலத்தில் இரவு பகலாக நோயாளிகளுக்காக உழைத்து, உயிரைத் தியாகம் செய்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.