சுவாமி விவேகானந்தர் எல்லா மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு அன்பான நெறியினை பரப்பினார் என மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஸ்ணமிஷன் முகாமையாளர் நீலமாதவானந்த மகாராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை டெலிகிளையார் பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் சிலை அங்குரார்ப்பண வைபவம் பாடசாலையின் அதிபர் எஸ். அலெக்சாந்தர் தலைமையில் நேற்று (24) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அதிதிகள் மேள தாள வாத்தியங்கள் இசை முழங்க அழைத்து வரப்பட்டு அங்குரார்ப்பண வைபவம் நடைபெற்றது. அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; எந்த ஒரு மதத்திலும் இன்னொரு மதத்தை அழித்து விட்டு முன்னேற முடியும் என்ற கருத்து இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் மதம் பெரியது. குறிப்பாக அவர் இந்து மதத்தினை சொல்லுகின்ற போது மக்கள் தங்களுடைய உணர்வினாலே, சிந்தனையினாலே எல்லாவற்றையும் கடவுளுக்காக செய்யக்கூடியவர்கள்.
இந்து மதத்தின் தலையாய சிறப்பு, நாம் எல்லாவற்றையும் கடவுளுக்காக படைப்பது புதிய உடுப்பு வாங்கினால் கடவுள், புதிய பாத்திரம் வாங்கினால் கடவுள் எல்லாவற்றையும் கடவுளுக்காக படைப்பது.
நமது மதம் எங்கே ஆரம்பிக்கின்றது என்றால் நம்முடைய சமயலறையிலேயே ஆரம்பிக்கின்றது, எல்லா இடத்திலும் அதனுடைய பயிற்சி இருக்கின்றது. அதனால் அதனை தர்மம் என்றார்கள்.
சுவாமி விவேகானந்தர் கூறும்போது; இந்து மதத்தவன் தன்னுயிரை மதத்திற்காக விடுவானே தவிர மற்றவர்களை துன்பப்படுத்த மாட்டான். யோசித்து பாருங்கள் நம்முடைய கோயில்களில் எல்லோரும் நன்றாக இருக்கட்டும்,
எல்லோரும் நோய் நொடியின்றி வாழட்டும் ஒவ்வொரு பிரார்த்தனையிலும் ஒவ்வொரு தோத்திரத்திலும் அமைந்துள்ளன.
ஆகவே இந்து மதம் ஒருத்தருக்கு மாத்திரம் சொந்தமானதன்று உலகம் தழுவியது. வாழ்வியல் வழிமுறைகளை சொல்கிறது. வலிமையோடு வாழுங்கள்,
சிந்தனைகளை விரிவாக்கம் செய்து ஒரு வட்டத்துக்குள் இருந்து விடுபட்டு பரந்து வாழ வேண்டும் அதனை தான் சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் அமைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் விசேட நிருபர்