பன்றி இறைச்சி சாப்பிடும் முன் இஸ்லாமிய வாசகங்களை கூறி டிக்டொக் வீடியோ பதிவை வெளியிட்ட இந்தோனேசிய பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
33 வயதான லினா லுத்பியாவாத்தி என்ற அந்தப் பெண் சமய தனி நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டியதாக குற்றங்காணப்பட்டுள்ளார். அவருக்கு 16,245 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவின் சர்ச்சைக்குரிய மத நிந்தனை சட்டத்துடன் தொடர்புபட்ட மற்றொரு சம்பவமாக இது உள்ளது.
பொலிவுட் திரைப்படங்களில் மோகம் கொண்டு லீனா முகர்ஜி என தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் தன்னை ஒரு முஸ்லிமாகவே அடையாளப்படுத்தியுள்ளார். இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு மில்லியன் டிக்டொக் ஆதரவாளர்களை பெற்ற அவர் இந்தியாவில் வர்த்தகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அவர் கடந்த மார்ச் மாதம் டிக்டொக்கில் பதிவிட்ட வீடியோவில், அரபு மொழியில் “அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்” என்ற அர்த்தம் கொண்ட “பிஸ்மில்லா” என்ற வாசகத்தை உச்சரித்து பன்றி இறைச்சியை சாப்பிடுவது பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ பிரபலமானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட மதுபானத்தை இலவசமாக வழங்கிய குற்றச்சாட்டில் இந்தோனேசியாவில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 2017 இல் இஸ்லாத்தை நிந்தித்த குற்றச்சாட்டில் ஜகர்தாவின் முன்னாள் அளுநர் பசுக்கி ட்ஜஹாஜா புர்னமாவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.